தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதில் அதிருப்தி ஏற்பட்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பழனிசாமி அணி சண்முகம் அணி என்று அதிமுக பிளவுபட்டது.
சண்முகம் அணியினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து தவெக அமைச்சரவையில் இடம்பெற முயற்சித்தது. இதில் வெகுண்டெழுந்த பழனிசாமி, சண்முகம் அணியில் இருந்த மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.
அடுத்தபடியாக அதிமுகவின் எம்.எல்.ஏக்கள், கட்சிக்கு எதிராக நடந்து தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுத, இதனால் சண்முகம் அணியினரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை விஜய்.

அதிமுகவும் இல்லாமல் தவெகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் சண்முகம் அணியினர் சிக்கினர். இதில் 5 பேர் அதிருப்தி அடைந்து பழனிசாமி பக்கம் சென்றனர். 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்றுவிட்டனர். மேலும் பலர் தவெகவுக்கு செல்வதற்கு முன்பு பழனிசாமி அணியினர் சண்முகம் அணியினரிடம் பேசி சமாதானம் செய்துவிட்டனர். இரு அணியும் இணைந்து, ‘’அதிமுகவில் பிளவு இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது’’ என்று அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்தில், ‘’எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ என்று பேசிய ஜெயலலிதா வீடியோவை பரப்பி வருகின்றனர்.
மேலும், ‘’கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..நம் இலக்கு ஒன்றுதான்… அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! ’’என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதில் சண்முகம் மட்டும் சமாதானம் ஆகாமல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.



