லைபீரிய நாட்டின் கொடியுடன் கூடிய ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ (Shenlong Suezmax) என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல், சர்வதேச கடல் வழிப்பாதையில் நிலவும் பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மார்ச் 1ம் தேதி சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இந்த கப்பலில் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டது. மார்ச் 3ம் தேதி அங்கிருந்து கிளம்பிய நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு Automatic Identification System அமைப்பை 9 ம் தேதி அணைத்து வைத்தது. இந்த கருவி மூலம் தான் கப்பலின் அடையாளம், வேகம், அருகில் உள்ள கப்பல், அருகில் உள்ள துறைமுகங்களை அடையாளம் காண முடியும்.
சுமார் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்துள்ள இந்தக் கப்பல், தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தக் கப்பலின் வருகையில் மிக முக்கியமான அம்சம் அது பயணித்த பாதையாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இதயம் போன்ற பகுதியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) வழியாக இந்தக் கப்பல் இந்தியாவுக்குப் பயணித்துள்ளது. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்தப் பகுதியில் பயணப்பது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டாலும், முறையான பாதுகாப்பு மற்றும் திட்டமிடலுடன் இந்தக் கப்பல் மும்பையை வந்தடைந்துள்ளது. இது இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
தற்போது மும்பை கடற்கரையில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பலில் உள்ள கச்சா எண்ணெய், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்காகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தில் நிலையற்ற தன்மை நிலவும் இக்காலகட்டத்தில், இவ்வளவு பெரிய அளவிலான கச்சா எண்ணெய் இந்தியா வந்தடைந்திருப்பது பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


