சூரியனில் இருந்து பிறந்ததுதான் பூமி உள்ளிட்ட கிரகங்கள். பூமிக்கு தாய் சூரியன். உயிர்களின் வளர்ச்சிக்கு ஆதாராம் சூரியன். அத்தகைய சூரியனை கொண்டாடும் நாள் தைப்பொங்கல்.
உலகனைத்துக்கும் வெப்பம் அளித்து உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வழிக்கும் சூரியனைக் கொண்டாடுவோம். 12 மாதங்களில் சூரியனைக் கொண்டாடுவதற்கு உகந்த நாள் தை முதல் நாள். இதை மகர சங்கராந்தி என்றும் சொல்வர். தென் திசையில் இருந்து வடதிசைக்கு சூரியன் திரும்பும் நாள் மகர சங்கராந்தி. டிசம்பர் 21ம் தேதி அன்று சூரியன் மகர ரேகையின் மீது இருக்கிறது. அது மெல்ல மெல்ல வடக்கு திசைக்கு மாறுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமடைவது போன்று தை மாதத்தில் சூரியன் கதி மாறுகிறது. இதனால்தான் சித்திரை மற்றும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அதிலும் பொங்கல் மட்டும் தொடர்ந்து நான்கு நாட்கள் நீடிக்கிறது. வடக்கு திசைக்கு மாறும் நாளினை போற்றுவதே பொங்கல்.

தை மாதம் அறுவடை மாதம் என்பதால் அறுவடைத்திருநாள் ஆகவும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஞாயிறு போற்றுதும் என்பது பொங்கல் . இந்த பொங்கல் நாளில் அறுவை செய்த நெல்லினைக்கொண்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.
அதிகாலையில் இரண்டு அடுப்புகள் மூட்டி அதில் புதுப்பானைகள் வைத்து புத்தரிசி இட்டு பொங்கலோ பொங்கல் என்று கூவி, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் செய்து , கோட்டுக்கறி வைத்து உதயமாகும் சூரியனை வழிபடுவர் தமிழர்கள்.

சூரியனுக்கு வணக்கம் செய்வது தமிழகத்தில் மட்டுமல்லாது வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழர் வாழும் நாடுகளில் தை மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.



