இந்தியா முழுவதும் ஓட்டல்கள் இயங்க முடியாமல் முடக்கப்படுவதற்கும், ஆட்டோக்கள் மற்றும் சில ரக கார்கள் இயங்க முடியாமல் போவதற்கும் முக்கிய காரணம் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்.
இது ஏன் முடக்கப்பட்டது?
இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வருவதால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கும் இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் என்ன காரணம்?
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 31.3 மில்லியன் டன் எல்.பி.ஜி. தேவைப்படுகிறது. இதில் 87 சதவிகிதம் வீட்டு பயன்பாடாக உள்ளது. 13 சதவிகிதம் வணிக பயன்பாடு. தேவைப்படும் எல்.பி.ஜி.யில் 62 சதவிகிதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் 80ல் இருந்து 90 சதவிகித இறக்குமதி நடந்து வந்தது. தற்போது போர் காரணமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் அதன் வழியாக வரவேண்டிய எல்.பி.ஜி. கப்பல்கள் இந்தியாவுக்கு வரமுடியாத நிலை இருக்கிறது. இதனால்தான் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.
சென்னை எண்ணூர் இன்டேன் பாட்டிலிங் பிளாண்டில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 130 லாரிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 80 லாரிகளில் மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் வேறு இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



