மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு விவகாரம் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசால் அவசரச் சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு, அந்த அவசரச் சட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றவில்லை. இதனால் காலப்போக்கில் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது.
இதற்கிடையில், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மராத்தா சமூகத்தினருக்கான 21 சதவீத இடஒதுக்கீடு மற்றும் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவதாகக் கூறி நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசு இந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளை இந்த அரசு பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல், அரசின் இந்த அறிவிப்பை “ரம்ஜான் பரிசு” என்று கிண்டலாகக் குறிப்பிட்டு தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.(Online Tamil News)



