மகாராஷ்ட்ரா மாநில துணை முதல்வர் அஜித் பவார்(Ajit Pawar) விமான விபத்தில் இறந்து போனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி பேதமின்றி பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநில அரசியலில் தனித்துவமாக விளங்கிய சரத்பவாரின் உறவினரான அஜித்பவாரும் அந்த மாநில அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். பின்னர், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் பிரிந்து, பா.ஜ.க.வுடன் கூட்டணியில் சேர்ந்தவர். அந்தக் கூட்டணியிலும் துணை முதலமைச்சர் என்ற முக்கியத்துவத்தைப் பெற்றவர்.
எந்தப் பக்கம் சென்றாலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக்கூடிய வல்லவரான அஜித்பவாருக்கு நேர்ந்த முடிவு என்பது எதிர்பாராதது. துன்பகரமானது. எந்த பாரமதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அவர் 7 முறை வெற்றி பெற்ற அவர் அதே பாரமதி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துயரம் மிகுந்த நேரத்தில், இந்த விபத்து குறித்த சர்ச்சையும் சந்தேகங்களும் அரசியல் வட்டாரத்தில் எதிரொலிக்கின்றன.
மேற்குவங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி(Mamata Banerjee) இது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருக்கிறார். அஜித்பவார் பயணித்த தனி விமானம் விபத்துக்குள்ளானதில் சந்தேகம் இருப்பதாகவும், இது பற்றி முழுமையான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் பார்வையாளர்கள் பலரும் இந்தக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எந்த ஒரு விபத்தும் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டியதுதான். அஜித்பவார் பயணித்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்கிற தொழில்நுட்பக் காரணம் முதன்மையாக இருக்கும் அதேநிலையில், அரசியல் சூழல்களும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளன.(Online Tamil News)
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அஜித்பவார். கட்சித் தலைமையைத் தன்னிடம் சரத்பவார் ஒப்படைப்பார் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அவரும் அதையே விரும்பினார். அஜித்பவார் மீது ஊழல் புகார்கள் வெளிவந்தன. அவருக்கு எதிராக மராட்டிய மாநில பா.ஜ.க. வரிந்து கட்டி நின்றது. விசாரணைகளும் தொடங்கின. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் தன் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை முன்னிலைப்படுத்த, தலைமைப் பதவியை எதிர்பார்த்திருந்த அஜித்பவார் அதிருப்தியடைந்தார். அதன் விளைவாக, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கொண்டாடி, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, பா.ஜ.க. கூட்டணி அரசில் பங்கு வகித்தார்.
எந்த அஜித்பவார் மீது பா.ஜ.க. கடும் ஊழல் குற்றச்சாட்டு சொன்னதோ, அதே அஜித்பவாரை தனது கூட்டணி ஆட்சியில் இணைத்துக்கொண்டு பதவி வழங்கியது. பா.ஜ.க. எனும் வாஷிங்மெஷினில் ஊழல் கறைகள் நீக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. ஆனால், பா.ஜ.க. தலைமை அதனைப் பொருட்படுத்தவில்லை. மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்ட நிலையில், சிவசேனா கட்சியை இரண்டாகப் பிளந்துவிட்ட நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசையும் செல்வாக்கு இழக்கச் செய்யும் உத்தியாக, தன்னால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அஜித்பவாரை தன் பக்கம் வைத்துக் கொண்டது பா.ஜ.க.
அண்மையில், அஜித்பவாரின் அரசியல் பார்வையில் மாற்றங்கள் தெரிய வந்தன. அவர் மீண்டும் சரத்பவாருடன் இணைந்து தேசியவாத காங்கிரசை ஒன்றாக்கி வலிமைப்படுத்தக்கூடும் என்கிற யூகங்கள் வெளிப்பட்டன. அஜித்பவாரும் இதை சூசகமாகத் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், அவர் பயணித்த தனி விமானம் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்களால் வெளிப்படையான சந்தேகம் எழுப்பப்படுகிறது.
அரசியலில் ஏற்படும் திடீர் மரணங்கள், விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் ஆகியவை குறித்த சர்ச்சைகள் எழுவது புதிததல்ல. ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த போது, அது குறித்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் கிளம்பின. ராஜசேகர் ரெட்டி மரணத்திற்குப் பிறகு, ஆந்திரா மாநில அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்த நிலையில், அவர் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய காங்கிரஸ் அரசினாலேயே கைது செய்யப்பட, பின்னர் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க, இப்போது அவர் எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டு, ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறார்.
ஒரு விபத்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அரசியல் களத்தில் பலவித எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அஜித்பவார் பயணித்த விமானம் ஏன் விபத்திற்குள்ளானது என்ற சந்தேகம் எழுகிறது.



