தமிழ்நாடு அரசு கடந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், அதேபோல் 2014 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015–2016 முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விருது வழங்கும் விழா விவரங்கள்
இந்த விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு ஏ. ஆர். ரகுமான் நன்றி!
இந்தித் திரையுலகில்தனக்கு எதிராக ஒரு “கும்பல்” செயல்படுவதாகவும், அதன் காரணமாகத் தனக்கு நல்ல வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் ஏ.ஆர். ரகுமான் (A.R. Rahman) சமீபத்தில் தெரிவித்தது பெரும் பேசும்பொருளானது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விருதுகளில், “பொன்னியின் செல்வன் – I” திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விருது அறிவிப்பைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “பொன்னியின் செல்வன் – I (Ponniyin Selvan-I)படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு என் மனப்பூர்வமான நன்றி. இந்த அங்கீகாரம் எனக்கு பெருமை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து
மேலும், இந்த விருதுகளைப் பெற்றுள்ள அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான், தமிழக அரசின் இந்த முயற்சி திரையுலக கலைஞர்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நன்றி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.(Online Tamil News)



