எஸ்ஐஆர்க்கு எதிராக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி ஆகியோர் அமர்வு முன்பு 04-02-26 அன்று நடந்த விசாரணையில் மம்தா பானர்ஜி தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
ஆரம்பத்தில் மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், “எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை முடிக்க இன்னும் 4 நாட்கள் மட்டும் உள்ளன. ஆனால், இதுவரை பதிவு செய்யப்படாத 32 லட்சம் பேர். கிட்டத்தட்ட 1.36 கோடி பேர் முரண்பாட்டு பட்டியலில் உள்ளனர். 63 லட்சம் பேருக்கான முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. இருப்பிடச் சான்றிதழ்கள், ஆதார், ஓ.பி.சி சான்றிதழ். இவற்றில் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
முரண்பாடு பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயர்களையும் மேற்கோள் காட்டுவதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் பதிவேற்ற வேண்டும். இதை முந்தைய விசாரணையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குப் பிறகு, பெயர், வயது, பாலினம் ஆகியவை மட்டும் தான் உள்ளன. தவிர வேறு எந்த காரணங்களும் கொடுக்கப்படவில்லை” என வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி, “அது வலைத்தளத்தில் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார். அதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘சில சுருக்கமான காரணங்கள் கூறப்பட வேண்டும். மக்கள் ஏன் பட்டியலில் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெயர் பொருந்தாதது தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்’ என்று கூறினார்.
அதை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒருவர் தட்டா (Dutta) என்று எழுதுகிறார், சிலர் அதை தத்தா (Datta) என எழுதலாம் என்று வைத்துக்கொள்வோம்’ என்றபோது, வழக்கறிஞர் ஷியாம் திவான், “பட்டியலில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் சிறிய பெயர் பொருத்தமின்மை கொண்டவர்கள். உண்மையான வாக்காளர்களின் உதாரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். சிராக் திப்ரேவாலின் தந்தையின் பெயரின் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஏனெனில் தந்தையின் பெயரின் நடுப் பெயராக குமார் உள்ளது. சில சமயங்களில் இந்த நடுப்பெயர் விடுப்பட்டு போகலாம். வங்க மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உச்சரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி சூர்யகாந்த், “திவேதி, நீங்கள் உள்ளூர் பேச்சுவழக்கில் பேசும் விதத்தில் சில முரண்பாடுகள் உள்ளன, இதுபோன்ற விஷயங்கள் இந்தியா முழுவதும் நடக்கின்றன” என்று கூறினார்.(Online Tamil News)
இதையடுத்து மம்தா பானர்ஜி வாதிடுகையில், “நான் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவள். நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு 6 கடிதங்கள் எழுதினோம். ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒருபோதும் பதில் கிடைக்கவில்லை” என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. தீர்வு வருவதையும், எந்த நிரபராதியும் விடுபடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி, “மாமியார் வீட்டிற்குச் சென்ற சில பெண்களை ஒருதலைப்பட்சமாக நீக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் ஏழைகள் பிளாட் வாங்குகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் இடம் மாறுகிறார்கள். ஆனால் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ஆதார் இருந்தால் எங்களுக்கு இன்னொரு சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வசிப்பிட சாதிச் சான்றிதழ் போன்றவை எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள்தான் அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைத்தனர். 2 மாதங்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மக்கள் வெளியே இருக்கும்போது இதைச் செய்தார்கள். பி.எல்.ஓக்கள் தற்கொலை செய்து கொண்டனர். தேர்தல் அதிகாரிகளைக் குறை கூறினர். மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது, ஏன் அசாம் குறிவைக்கப்படவில்லை? ஏன் அசாம் கூடாது? முதல் கட்டத்தில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் ஆணையம், மன்னிக்கவும் வாட்ஸ்அப் ஆணையம் இதையெல்லாம் செய்கிறது” என்று ஆவேசமாக வாதிட்டார்.
அதே நாளில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது முதல் பேச்சில் உரையாற்றிய மாநிலங்கள் அவை எம்பி நடிகர் கமலஹாசன், என் ஓட்டை யாருக்கும் இழக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னதுடன், நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன். பகுந்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது. உம் வினை உம்மைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூடி வாழும். வந்தீர், வென்றீர், செல்வீர். இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட என்று எழுப்பிய முழக்கம் எட்டுத்திக்கிலும் ஒலிக்கிறது.



