பதினான்கு ஆண்டுகளாக நடந்து வந்த செம்மண் குவாரி வழக்கில் இருந்து விடுதலை ஆகி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. அவரது மகன் மற்றும் உறவினர்கள் 6 பேரும் விடுதலை ஆகி இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்காலத்தில் அதாவது கடந்த 2006-2011 காலகட்டத்திலான திமுக ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் இருக்கும் செம்மண் குவாரியில் அனுமதியை மீறி அளவுக்கதிகமாக ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்று புகார் எழுந்தது.
2012 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி, கோதகுமார்,ராஜமகேந்திரன், சதானந்தம், ஜெயச்சந்திரன் , லோகநாதன், கோபிநாதன் உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் உடலக்குறைவால் லோகநாதன் உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம்தான் முடிவடைந்தது. மொத்தம் 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாகவே பிறழ் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.
இருதரப்பு வாதமும் நிறைவடைந்ததை அடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி இன்று தீர்ப்பு வழங்கினார். பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.



