யாருடன் கூட்டணி? வைப்பது என்பது குறித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு வாசலில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் பன்னீர்செல்வம்.
தொண்டர்கள் பலரும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி ஆவேசமாக பேசவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர், ’’மாமா, அவர முடிவெடுக்கச் சொல்லு…’’, என்று சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார். இன்னொருவர், ‘’அவரு முடிவெடுக்கட்டும்’’ என்று சத்தம் போட்டார். அதாவது ஆதரவாளர்கள் பலரும் பலவிதமாக கருத்தைச் சொல்லி குழப்பிக் கொண்டிருந்த போது, ஓபிஎஸ் -ஐ முடிவெடுக்கச் சொல்லி இவ்வாறு சத்தம் போட்டவர்களைப் பார்த்து, ‘பொறுப்பா.. பொறுப்பா..’ என்று சமாதானப் படுத்தினார் சையது கான். ஓபிஎஸ்சும் எழுந்து நின்று சமாதானம் செய்தார். ஆனால் யாரும் சமாதானம் ஆகாமல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பார்த்து, ‘என்ன.. ஒருமையில பேசுற?’ என்று சத்தம் போட்டார் சையது கான். உடனே சையது கானை பார்த்து முறைத்தார் ஓபிஎஸ்.

இத்தனை களேபரத்திற்கு பின்னர் ஓபிஎஸ், ’’திமுகவில் இணையப்போவதாக தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தனிக்கட்சி தொடங்கவோ பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடவோ நாங்கள் அதிமுக உரிமை மீட்புக்கழகம் தொடங்கப்படவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிட்டது தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பதற்காகத்தான். 2வது தர்மயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதே மனோஜ்குமாருக்காகவும், வைத்திலிங்கத்திற்கு ஆகவும்தான்.

அதிமுக ஒன்றிணையவே இயக்கம் தொடங்கினோம். ஒன்றிணைந் தால்தான் election 2026 ல்பெரு வெற்றி பெற முடியும். எடப்பாடியுடன் இணைவதற்கு நான் ரெடி, அவர் ரெடியா? என்று டிடிவி தினகரன் கேட்டுச்சொல்ல வேண்டும். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்கிறார் டிடிவி தினகரன். அவர்தான் ஒன்றிணைப்புக்கு வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைந்துவிட்டால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவினை அறிவித்தார்.



