குற்றப்பத்திரிகை என்கிற தமிழ்ப்படம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் விசாரணை நடந்துகொண்டிருந்த காலத்தில், இந்தப் படம் எடுக்கப்பட்டது. விசாரணைத் தரவுகளுக்கும் திரைப்படக் கதையின் கருத்துகளுக்கும் மாறுபாடு இருந்தது. அது அரசியல் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது. விளைவு? குற்றப்பத்திரிகை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் எனப்படும் சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடைசியில், 15 ஆண்டுகள் கழித்துதான் படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. அதுவும் பல காட்சிகள் வெட்டப்பட்ட நிலையில்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான மேல்முறையீடு, அரசியல் கண்ணோட்ட மாற்றங்கள், தலைமுறை இடைவெளி இத்தனையையும் கடந்து குற்ற்பபத்திரிகை வெளியானபோது, சாரமின்றிப் போய்விட்டது. குற்றப்பத்திரிகை படம் கிடப்பில் போடப்பட்டிருப்பதை ரசிகர்கள் மறந்து போன நிலையில், அது வெளியாகி, வரவேற்பின்றிப் போய்விட்டது. அந்தப் படத்தின் கதையுடன் அரசியல் கலந்திருந்தது. ஆனால், அதன் நடிகர்கள், இயக்குநர், தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் கட்சி அரசியலில் தலைவர்களாகவோ, பொறுப்புகளிலோ இல்லை.
குற்றப்பத்திரிகையை அன்றைய மத்திய அரசின் சென்சார் போர்டு எப்படி கையாண்டதோ, ஜனநாயகன் படத்தை இன்றைய மத்திய அரசின் சென்சார் போர்டு அப்படித்தான் கையாள்கிறது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், விஜய் நடித்த ஜனநாயகன். அதன் கதாநாயகனான விஜய், இப்போது அரசியல் கட்சித் தலைவர். அதனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தப் படத்தை வெளியிடும்போது, அது அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, தேர்தல் கள அரசியலில் கைக் கொடுக்கும் என்ற கணக்குடன் வேலைகள் நடந்தன.
அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால், இனிமேல் நடிக்கப்போவதில்லை என்றும், ஜனநாயகன் தான் தனது கடைசிப்படம் என்று விஜய் அறிவித்ததால், அவருடைய கட்சியில் உள்ள ரசிகர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட ரசிகர்கள் எனப் பலரும் படத்தை மிகவும் எதிர்பார்த்தனர். பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும்போது, வேறு எந்தப் படமும் வெளியாகக்கூடாது என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் என்றதும், பராசக்தி படத்தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், சிவகார்த்திகேயன் மீதும் கோபத்தைக் கொட்டி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பதிவிட்டவர்களும் உண்டு. பராசக்தி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. தனியாக வெளியாகவேண்டும் என நினைத்த ஜனநாயகன் எப்போது ரிலீஸாகும் என்பது தெரியாமல் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
பராசக்தி படத்திற்கும் சென்சார் பிரச்சினைகள் இருந்தன. அதன் இயக்குநர், எந்தெந்த காட்சிகளில் தணிக்கைத் துறை அனுமதி மறுக்கும் என்பதை யூகித்து, அதற்கு மாற்றான காட்சிகளை முன்கூட்டியே எடுத்து வைத்திருந்ததால், தணிக்கைத் துறை சொன்ன மாற்றங்களை செய்து, படத்தை வெளியிட்டு விட்டார். பராசக்தி படத்துக்கு சென்சாரில் என்னென்ன பிரச்சினைகள் வந்தன என்பதை அதன் இயக்குநர் வெளிப்படையாக சொன்னதுபோல, ஜனநாயகனுக்கு சென்சார் என்ன நெருக்கடி தருகிறது என்பதை அதன் இயக்குநர் சொல்லத் தயங்குகிறார். கட்சித் தலைவராகிவிட்ட கதாநாயகன் விஜய்யும் வாய் திறக்க மறுக்கிறார்.
ஊடக செய்திகளின் அடிப்படையில், ஜனநாயகன் படத்தில் ராணுவம் தொடர்பான காட்சிகள் இருப்பதாகவும், அதற்குரிய தடையின்மைச் சான்று பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. படத்தில் மதரீதியான காட்சிகள் இருப்பதால் சென்சார் எதிர்ப்பத் தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டிரைலரில் வில்லன்கான அரசியல்வாதிகளை கதநாயகன் விஜய் அடித்து வெளுப்பது போல காட்சி இருக்கிறது. விஜய்யும் தற்போது ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பதால், தன்னுடைய அரசியல் எதிரிகளை வெளுப்பது போன்ற குறியீடாகக் கருதி, இந்தக் காட்சிக்கு சென்சார் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இவை எல்லாமே செவி வழித் தகவல்கள்தான். எதுவும் தெளிவாக முடிவாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், நீதிமன்றத்திற்கு சென்றது ஜனநாயகன் படக்குழு. தனி நீதிபதி தீர்ப்பு, அதற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் முறையீடு, அங்கு தனி நீதிபதி தீர்ப்பு ரத்து, மீண்டும் தனி நீதிபதியிடம் முறையிடுமாறு உத்தரவு என சென்சார் சிக்கல்கள் தொடர்வதால், பொங்கலுக்கு வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்ட ஜனநாயகன், இந்திய ஜனநாயகத்தின் முக்கிய நாளான குடியரசு தினத்தன்றுகூட வெளியாக முடியவில்லை.
தணிக்கைத் துறையின் நெருக்கடிகள் திரைத்துறைக்குப் புதிததல்ல. அவற்றை எதிர்கொள்ளும் வழியும் ஜனநாயகன் படக்குழுவுக்கு சரியகத் தெரியவில்லை. இதில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசும் துணிச்சலும் ஜனநாயகன் ஹீரோவான அரசியல் கட்சித் தலைவர் விஜய்க்கு இல்லை.



