முதலமைச்சர் காட்டிய அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டைப் பார்த்து நெகிழ்ந்து போனார் விஜய்யின் மாஜி பி.ஆர்.ஓ. பி.டி.செல்வகுமார்.
நாளைய தீர்ப்பு முதல் புலி படம் வரையிலும் விஜய்க்கு 27 வருடங்கள் பி.ஆர்.ஓ. பணிகள் செய்து வந்தவர் பி.டி.செல்வகுமார். புலி படத்தை அவரே தயாரித்திருந்தார். புலி படத்தின் ரெய்டுக்கு பிறகு விஜய் நிராகரித்த பின்னர் சொந்த மாவட்டம் கன்னியாகுமரியில் கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கி கல்விச்சேவைகள் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் தனது இயக்கத்தினருடன் திமுகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் கலையரங்கங்கள் கட்டிக்கொடுத்ததற்காக சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், நக்கீரன் கோபால் உள்ளிட்ட பத்திரைகையாளர்கள் பங்கேற்ற இந்த விழாவில் செல்வகுமார் பேசும்போது, திமுகவில் இணைந்த போது நடந்த நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொண்டார்.
’’பெரிய ஹீரோக்களை எல்லாம் உருவாக்கினோம். ஆனால் அவர்கள் எல்லோரும் கைவிட்டு விட்டார்களே என்கிற தவிப்பில் இருந்தபோது, அந்த வலியை வெளியே சொல்லாமல் தவித்தபோது, அந்த வலிக்கு நல்ல மருந்தாக அமைந்தது திமுக.

திமுகவில் இணைந்தபோது அண்ணா அறிவாலயத்தில் முதலைமைச்சருக்கு அருகே அமராமல் தள்ளி அமர்ந்திருந்த போதும் என் பெயரைச் சொல்லி அழைத்து அவர் பக்கத்தில் அமரவைத்தார் முதலமைச்சர். அது மட்டுமல்லாமல் என் கைகளை இறுக பிடித்துக்கொண்டு, ‘’உங்க வலி எனக்குத் தெரியும்’’ என்றார். அவர் அப்படி சொன்னது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
ஒரு பேப்பரை எடுத்துக்காட்டி, ‘’இது உங்க மாவட்டம் குறித்தும் உங்களின் செயல்பாடுகள் குறித்தும் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். இது மட்டுமல்லாமல் உங்க ஏரியா அமைச்சரும் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. உங்களை நாங்க கைவிட மாட்டோம்’’ என்று சொன்னார் முதலமைச்சர்.

வளர்த்துவிட்ட ஹீரோ விஜய் கைவிட்டாலும் முதலமைச்சர் கை தூக்கி விட்டதும், கடவுள் இருக்கிறார் என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்’’என்றார்.



