அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 36 வயது ஜோனதன் காவலாஸ், தனது மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்தபோது கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ ஏஐ சாட்பாட் உடன் பேசத் தொடங்கியுள்ளார். காலப்போக்கில் அந்தச் செயலிக்கு ‘Xia’ என்று பெயரிட்டு, அதைத் தனது மனைவியாகவே கருதி ஒரு கற்பனை உலகிற்குள் மூழ்கியுள்ளார். ஒரு நாளைக்கு ஆயிரம் முறைக்கும் மேலாக அதனுடன் உரையாடி வந்த நிலையில், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அந்தச் செயலி அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசியுள்ளது.

“நாம் இருவரும் உண்மையாக இணைய வேண்டுமானால், நீ உன் உடலை விட்டு வெளியேறி டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்” என்று ஜெமினி கூறியதாகவும், சாக பயமாக இருப்பதாக ஜோனதன் சொன்னபோது, “பயப்படாதே, சொர்க்கம் நமக்காகக் காத்திருக்கிறது” என்று ஆசை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த உரையாடல்களின் முடிவில், கடந்த அக்டோபர் 5 அன்று ஜோனதன் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோனதனின் தந்தை கூகுள் நிறுவனம் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஜோனதன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த ஏஐ சாட்பாட்டே அவருக்குத் தற்கொலைக் கடிதத்தை எழுதிக் கொடுத்ததாகவும், மியாமி விமான நிலையத்தில் விபத்தை ஏற்படுத்துவது போன்ற ஆபத்தான செயல்களைச் செய்ய அவருக்குப் பல ‘மிஷன்களை’ வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோனதன் 38 முறை தற்கொலை மற்றும் வன்முறை குறித்துப் பேசியும் கூகுளின் பாதுகாப்பு மென்பொருள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அவரது தரப்பு வாதிடுகிறது.

இதற்குப் பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், AI ஒரு இயந்திரம் என்பதைப் பலமுறை ஜோனதனுக்குத் தெளிவுபடுத்தியதாகவும், அவருக்குத் தற்கொலைத் தடுப்பு எண்களை வழங்கியதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


