அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா. நாம் தமிழர் கட்சி சார்பில் இத்தொகுதியின் வேட்பாளர் நத்தம் சிவசங்கரன்.
ஆரம்பத்தில் இருந்தே பிரச்சாரக்கூட்டங்களில் இசக்கி சுப்பையாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் நத்தம் சிவசங்கரன். இதனால் இசக்கி சுப்பையா ஆதரவாளர் களுக்கும் நத்தம் சிவசங்கரனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்த வாக்குவாதம் தடித்து பல இடங்களில் பதற்றை ஏற்படுத்தி வருகிறது.

இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நத்தம் சிவசங்கரன் விமர்சித்தபோது, கூட்டத்தில் இருந்த இசக்கி சுப்பையா ஆதரவாளர் அதை எதிர்த்து குரல் கொடுக்க, ‘’நான் அப்படித்தாண்டா பேசுவேன். நத்தம் விஸ்வநாதனையே எதிர்த்து அரசியல் பழகியவன் நான். நான் வரும்போதே வாக்கரிசி போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். என் கூட்டத்துல வந்து பேசிய உன்னைய உயிரோடு விடுறேன் ஓடிப்போ’’ என்று ஆவேசமாகிறார்.
‘’ஏர்ப்போட்டுல அடைச்சு வச்சு இசக்கி சுப்பையா ஆட்கள் டோக்கன் கொடுக்குறாங்க. எல்லாமே ரூ.2,000, ரூ.6,000 டோக்கன். என்கிட்ட மட்டும் 60ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் இருக்குது’’என்று சொல்லிவிட்டு காட்டுகிறார். பின்னர், தேர்தல் ஆணையம் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குது. அங்க போய் ஆத்திரத்த காட்டாம, என்கிட்ட வந்து காட்டுறியா?’’ என்று ஆத்திரப்பட்டுள்ளார் சிவசங்கரன்.

கடந்த மாதம் அம்பாசமுத்திரம் வெள்ளாங்குழி அருகே நடந்த பறக்கும்படை சோதனையில் இசக்கி சுப்பையா படத்துடன் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசங்கரன் டோக்கன் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.



