மத்தியில் ஆளுகிற பாஜக அரசு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 534ல் இருந்து 850 ஆக உயர்த்துகிற சட்ட முன்வடிவை நிறைவேற்றுகிறார்கள். இதில் உத்தரபிரதேசம் (143), மத்திய பிரதேசம்(52), ராஜஸ்தான்(50), பீகார்(79), மகாராஷ்டிரா(76), குஜராத்(43) ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே 443 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. அதில் 425ல் வெற்றிபெற்றால் இந்தியாவை ஆளமுடியும் என்பது போல ஒரு தொகுதி மறுவரையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா(54), கர்நாடகா(41), கேரளா(20), தமிழ்நாடு(49), பாண்டிச்சேரி(1) போன்ற தென் மாநிலங்களுக்கு வெறும் 165 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ள நிலையில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் நலன்கள் பாதிக்கிற வகையில் ஒரு சட்டத்தை என்றென்றும் இந்தியாவை பாஜகவே ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடு கொண்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி இதன் விளைவுகளை பற்றி சற்றும் புரிந்து கொள்ளாமல், இதனுடைய விவரங்கள் தெரியாமல் அதனை ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இதை வைத்து மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு எதிரானது என்கிற கட்டமைப்பை வலுப்படுத்துகிறார்.

இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’விகிதாசார அதிகரிப்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தெற்கின் பங்கு சுமார் 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த குறைப்பின் நேரடி விளைவாக, தமிழ்நாடு 61 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சட்டத்தின் படி வெறும் 49 உறுப்பினர்களையே வழங்கப்படுகின்றன. 12 உறுப்பினர்கள் குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் இந்திய அளவில் புறக்கணிக்கப்படுகிறது.

கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய இந்த விஷயத்தை எடப்பாடி பழனிசாமி அடிமைத்தனத்திற்காக ஆதரிப்பது, அவர் செய்த பல வரலாற்றுப் பிழைகளில் மீண்டும் ஒன்றாக இது அமைகிறது. தேர்தல் களத்தில் நிச்சயம் இது எதிரொலிக்கும்’’என்கிறார்.



