மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, ஒரு மனிதருக்கு இதய செயலிழப்பு (Heart Failure) ஏற்படும் அபாயம் இருப்பதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் கணிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக இதய பாதிப்புகள் தீவிரமடைந்த பின்னரே கண்டறியப்படும் நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த நவீன AI கருவி, ஒரு நபரின் சிடி (CT Scan) ஸ்கேன் படங்களை மிகத் துல்லியமாக ஆய்வு செய்கிறது. இதயத்தைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் மிக நுட்பமான மாற்றங்கள் மற்றும் கொழுப்புப் படிவங்களை இந்தப் புதிய தொழில்நுட்பம் பகுப்பாய்வு செய்கிறது.

இதன் மூலம், ஒருவருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பதை இது முன்கூட்டியே எச்சரிக்கிறது.

இந்த ஆய்வின் போது, ஆயிரக்கணக்கான நோயாளிகளின் தரவுகளைக் கொண்டு இந்த AI கருவி சோதிக்கப்பட்டது. வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறிய முடியாத ஆபத்துகளைக்கூட இது மிக எளிதாகக் கண்டறிந்து விடுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளை முன்கூட்டியே வழங்கி, இதயப் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். மருத்துவ உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த AI கருவி, விரைவில் உலகளாவிய பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


