அரை நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்வெளி வீரர்கள் இன்று பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.

நாசாவின் ஓரியன் விண்கலத்தில் பயணித்த கமாண்டர் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகிய நான்கு வீரர்களும் தங்களின் 10 நாள் விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்தனர். இன்று அதிகாலை கலிபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில், பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் கடலில் மென்மையாகத் தரை இறங்கியது.

விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது நிலவிய கடும் வெப்பத்தையும் வேகத்தையும் திறம்படக் கையாண்டு, திட்டமிட்டபடி பசிபிக் கடலில் வந்து விழுந்தது. விண்கலம் கடலில் இறங்கிய சில நிமிடங்களிலேயே, அங்குக் காத்திருந்த அமெரிக்கக் கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் வீரர்களைப் பத்திரமாக மீட்டனர்.

1970-களில் மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ திட்டங்களுக்குப் பிறகு, நிலவுக்கு மிக அருகில் மனிதர்கள் சென்று திரும்பிய முதல் பயணம் இது என்பதால் உலக நாடுகளின் கவனம் இந்தப் பயணத்தின் மீது ஈர்க்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் வெற்றியானது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தப் பயணத்தின் போது மனிதர்கள் இதுவரை சென்றிராத தொலைவு வரை பயணித்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் விண்கலத்தின் பாதுகாப்புத் திறன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்த கட்டமாக 2028-ம் ஆண்டில் மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கும் ‘ஆர்ட்டெமிஸ் 3’ பணிகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு முக்கிய முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


