அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்திய மற்றும் அவருடன் நெருங்கிய தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆருடன் அரசியல் பழையவர்கள் பலரும் கட்சியின் கடைசி நிலையில் இருக்க, எம்.ஜி.ஆருடன் பழகாத பழனிசாமி இன்று கட்சியின் உச்சியில், பொதுச்செயலாளராக உள்ளார்.
ஆனால் தான் எம்.ஜி.ஆருடன் பழகியது போன்று அவர் சொல்லி இருப்பதால் எம்.ஜி.ஆருடன் அரசியல் பழகிய கே.சி.பழனிசாமி ஆத்திரமடைந்து உண்மை என்ன என்பது குறித்து கூறியிருக்கிறார்.

’’ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், முதலமைச்சராக இருந்தவர் குறைந்தபட்சம் நேர்மையோடும், நாணயதோடும், பொய் புரட்டுகளுக்கு அப்பாற்பட்டு நம்பகத்தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
புதிய தலைமுறைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று வெளியானது.
அதில் “இலங்கை பிரச்சனை வந்த போது கருப்பு சட்டை அணிந்துகொண்டு சத்யா ஸ்டூடியோவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் 2020ம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தந்தி டிவியில் நெறியாளர் ஹரியுடன் நடந்த கலந்துரையாடலில், “தான் இதுவரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்ததே இல்லை, அதற்கான முயற்சியும் எடுத்ததில்லை, பெரிய தலைவர்கள் மட்டுமே எம்.ஜி.ஆரை சந்திக்க முடியும்” என்றும் கூறியிருந்தார். அது தான் உண்மை.

தற்பொழுது புதியதலைமுறையில் உண்மைக்கு புறம்பாக தான் எதோ எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது போல காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு போலியான தோற்றத்தை உருவாக்குவதற்கு அப்பட்டமான பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
இது தேவையற்றது, இதன் மூலம் அவர் தனி மனித பண்பும், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாதவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். எப்படி இருந்தாலும் புரட்சித்தலைவர் தொண்டர்களை ஏமாற்ற முடியாது’’என்கிறார்.



