தவெகவுடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் பிரவீண் சக்கரவர்த்தி. தேர்தலுக்கு முன்பு கடைசி நேரத்தில் அவரது முயற்சி பலனளிக்காமல் போனாலும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பலனளித்துவிட்டது.
தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்ததால் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகியே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்.எல்., விசிக கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்த வண்ணம், தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. அதன் பின்னர் அமைச்சரவையிலும் இடம்பெற்றதால் திமுக கூட்டணியில் இருந்து விசிகவும் இடது சாரிகளும் விலகுகின்றனவா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், தவெக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரவீண் சக்கரவர்த்தி, ’’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ராகுல்காந்திக்கும், முதல்வர் விஜய்க்கும் மனமார்ந்த நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’’தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்’’ என்றும் தனது எக்ஸ் தள பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிபிஎம் சண்முகம், ‘’புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்’’என்கிறார்.
விசிக தலைவர் திருமாவளவன், ‘’மாநிலங்களவை தேர்தலில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அழைத்தார் காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி. வேட்புமனுவில் எனக்கு பதிலாக எஸ்.எஸ்.பாலாஜி பங்கேற்றார்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
“சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் சிபிஐ இடம்பெறவில்லை. நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம். தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வருகிறோம். தற்போது வரை கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை” என்று உறுதியாக கூறுகிறார் சிபிஐ முத்தரசன்.



