தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் மனம் வெதும்பி பேசினார்.
8 சதவிகித வாக்குகளுடன் கம்பீரமாக நின்ற நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த சதவிகிதம் முன்னேறி சீமான் உள்பட ஐந்து நாதக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லி இருந்த நிலையில், 5 சதவிகித வாக்கு சதவிகிதத்தை இழந்திருக்கிறது நாதக. காரைக்குடியில் சொந்த மண்ணில் நின்ற சீமான் டெபாசிட் இழந்தார். இந்த முடிவுகள் சீமானை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மறைமலை நகரில் நடந்த கூட்டத்தில் இந்த தோல்விக்கு காரணமான மக்களை விளாசி எடுத்தார். ஊடகங்களுக்கு தினந்தோறும் இரண்டு மூன்று பேட்டிகள் தந்து வந்த சீமான், தமிழ்நாட்டின் வீதிகள் தோறும் முழங்கி வந்த சீமான், படுதோல்வியால் இனி பேட்டியே கொடுக்கக் கூடாது, மக்கள் நலப் பிரச்சனைகளுக்காக போராடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.
இதுவரை பேட்டியே கொடுக்காமல், வீதிகள் தோறும் போராட்டம் நடத்தி முழங்காமல் விஜய் வெற்றி பெற்றுவிட்டதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
’’பேட்டியா பேட்டி போப்பா. எளிதாக கிடைகிற எந்த பொருளுக்கும் மரியாதை கிடையாது. கேட்கும் போதெல்லாம் மதிச்சு பேசினோம்ல. ஒண்ணுமே பேசாதவர கொண்டாடுறது….பேசுறவன துண்டாடுறது….’’

’’கடந்த 15 வருசமா எவ்வளவு பேசியிருப்பேன். எதுவும் பயனில்ல. எல்லாம் பாதிக்கப்பட்டு என்னைத்தேடி வருவான். எந்த போராட்டத்திற்கும் இனி என்னை கூப்பிடாதீங்க, வரமாட்டேன். போ போ.. உனக்குத்தான் ஒரு கஷ்டமும் வராதே. நீதான் கடவுளின் ஆட்சியை நிறுவி இருக்குறீயே… எதாவது ஒரு பிரச்சனை வந்து என் வீட்டுக்கு மனு கொடுக்க வா. அன்னைக்கு பார்ப்ப. இப்ப மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்குற சீமான் இருக்க மாட்டேன். சேட்ட உனக்கு. என்ன சொல்றோம் ஏதும் சொல்றோம்னு கேட்க முடியல.
நான் நிறைய பாடம் நடத்துனேன். எனக்கு மக்கள் நடத்துன பாடம் இருக்குல்ல.. படிக்க முடியல..திணறிட்டேன். ’’



