கொலைப்பழி உள்ளிட்ட பல வழக்குகளிலும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் சிக்கிய கதை அதிரவைக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ஜோதிடருக்கு அரசுப்பதவியா? என்று மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பதவி நியமனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நியமன உத்தரவை வாபஸ் பெற்றது தவெக அரசு.
யார் இந்த வெற்றிவேல்?
சாதாரண குடும்பத்தில் பிறந்த வெற்றிவேல், பண்டிட் வெற்றிவேல் ஆகி, பின்னர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் ஆனார். தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் விஜய்யின் ஜோதிட ஆலோசகராகவும் இருந்தவர் வெற்றிவேல். இதற்கு முன்பு ஜெயலலிதா, அத்வானி போன்ற அரசியல் பிரமுகர்களுக்கு ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசகராக இருந்தவர். கொலைப்பழி உள்ளிட்ட பல வழக்குகளிலும் இவர் சிக்கிய கதை அதிரவைக்கிறது.
முதல் மனைவி – கொலைப்பழியில் கைது:
ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறைதான் இவரது ஊர். திருப்பூரில் பிரிண்டி பிரஸ் நடத்திக்கொண்டிருந்த வெற்றிவேலுவுக்கும் ஆனந்திக்கும் திருமணம் நடந்து இருவரும் நம்பியூரில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனந்தி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அவரது தங்கை ராஜலட்சுமிக்கும் வெற்றிவேலுவுக்கும் தொடர்பு ஏற்பட, ஆனந்தி இதை கண்டித்திருக்கிறார். இதனால் ராஜலட்சுமியும் வெற்றிவேலுவும் சேர்ந்து பிரிண்டி பிரஸ்சுக்கு யூஸ் பண்ணுகிற கோந்தை கொடுத்து ஆனந்தியை கொன்றதாக 1994ல் கொலைப்பழி எழுந்திருக்கிறது. இந்த வழக்கில் கைதான வெற்றிவேல், ஆனந்தி தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை திசைதிருப்பி விட்டு விடுதலை ஆகி இருக்கிறார்.
ராஜலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பெற்றார்.

மூன்றாவது மனைவி வாக்குமூலம்:
ஆனந்தி, ராஜலட்சுமி கதையை மறைத்து சுமதிஸ்ரீ என்பவரை திருமணம் செய்து ஊத்துக்குளியில் வாழ்ந்திருக்கிறார் வெற்றிவேல். சுமதிஸ்ரீயின் நகைகளை விற்று குடும்பத்தை சமாளித்து வந்திருக்கிறார் வெற்றிவேல்.
பிரிடிண்டிங் பிரஸ்ஸில் வரும் வருமானம் போதவில்லை என்று பகுதி நேர தொழிலாக சோதிடம் பார்த்து வந்திருக்கிறார். நான் சொல்வது நடக்கவில்லை என்றால் கேளுங்கள் என்று சவால் விட்டு அதை எழுதிக்கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வெற்றிவேல் சொன்ன சோதிடம் பலருக்கு சாதகமாக அமைய, பலர் தேடி வர, பிரிண்டிங் பிரஸ் தொழிலை தூக்கி எறிந்துவிட்டு ஈரோட்டில் சோதிட நிலையம் அமைத்திருக்கிறார். அப்போது தன் பெயரை பண்டிட் வெற்றிவேல் என்று மாற்றி இருக்கிறார்.
இந்த சமயத்தில் ராஜலட்சுமி கணவரை விட்டுவிட்டு தன் பிள்ளைகளோடு வந்து வெற்றிவேலை சந்திக்க அவருக்கு வீடு எடுத்துக்கொடுத்து தங்க வைத்திருக்கிறார் வெற்றிவேல்.

ஜெ., – சசி ஆலோசகர்:
1996ல் அதிமுக வீழ்ச்சியை சந்தித்திருந்த வேளையில் அப்போதைய அதிமுக பிரமுகர் ஈரோடு முத்துசாமிக்கு சோதிடம் பார்த்திருக்கிறார் வெற்றிவேல். அதில் நம்பிக்கை வந்து பல அதிமுக பிரமுகர்களையும் அறிமுகப்படுத்தி வைக்க, போயஸ்கார்டனுக்குள்ளும் நுழைந்திருக்கிறார் வெற்றிவேல்.
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்ந்து சோதிடம் பார்த்து வந்த நிலையில் 2001ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க, வெற்றிவேல் சொன்னது நடந்ததால் அவரை ஆஸ்த்தான சோதிடராக்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் மூலம் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தன் கைக்குள் வைத்திருந்திருக்கிறார் வெற்றிவேல்.
விவாகரத்து:
சென்னையில் தனக்கு செல்வாகும் செல்வமும் கூடிவிட்டதால் ராஜலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறார். ஈரோடு பக்கமே வராத வெற்றிவேலை தேடித்தேடி கடைசியில் சென்னையில் அவரின் வீட்டை கண்டுபிடித்திருக்கிறார். வீட்டுக்குள் விடாமல் போலீசை விட்டு துரத்தி விட்டிருக்கிறார் வெற்றிவேல்.
தன்னைத்தேடி வந்துகொண்டிருந்ததால் சுமதிஸ்ரீக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் வெற்றிவேல். நீதிமன்றத்தில் வெற்றிவேலுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. இதனால் ஈரோட்டில் தாய் வீட்டிற்கே சென்று தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமதிஸ்ரீ கடந்த 2012ல் பத்திரிகைகளில் வெற்றிவேல் குறித்து வாக்குமூலம் அளித்து வந்தார்.
யோகம்:
பிள்ளைகளுடன் வாழ்ந்தால்தான் யோகம் என்று சோதிடம் சொல்வதால் ஆனந்திக்கு பிறந்த ஆர்த்தி, சுமதிஸ்ரீக்கு பிறந்த சாந்தினி, டெஸ்ட் டியூப் மூலம் ராஜலட்சுமிக்கு பிறந்த குழந்தையுடன் வாழ்ந்திருக்கிறார் வெற்றிவேல். விவாகரத்தின் போது சுமதிஸ்ரீயின் மகள் சாந்தினியை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிவேல்.
கைவிட்ட கார்டன்:
போயஸ் கார்டனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வெற்றிவேல், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாக மாட்டாட்டீர்கள் என்று சொன்னது பொய்யாகிப்போக ஜெயலலிதாவுக்கு அதிருப்தி. அதிமுகவின் அடுத்த தலைமை குறித்து சொன்னதில் சசிகலாவுக்கு அதிருப்தி. இதனால் கார்டனை விட்டு வெளியேறிவிட்டார்.
டெல்லி வாழ்க்கை:
அதிமுகவில் இருந்த செல்வாக்கை வைத்து டெல்லிக்கு சென்று பாஜக பிரமுகர்களை வளைத்திருக்கிறார் வெற்றிவேல். டெல்லிக்கு சென்றதும் தனது பெயரை ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று மாற்றி இருக்கிறார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சரத்பவார் போன்ற பெரும் அரசியல் தலைவர்களுக்கும், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் சோதிட ஆலோசகராக இருந்துள்ளார்.
சிங்கப்பூர் வாழ்க்கை:
டெல்லியில் ஏற்பட்ட சில சங்கடங்களால் சிங்கப்பூர் சென்று அங்கே சோதிட நிலையம் வைத்து நடத்தி இருக்கிறார் தொழிலதிபர்களை வளைத்து போட்டிருக்கிறார். அங்கே தனது பெயரை ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று மாற்றி இருக்கிறார்.
விஜய்க்கு வந்த நம்பிக்கை:
2020ல் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மீக அலோசகராகிவிட முயற்சித்திருக்கிறார். அது தோல்வியில் முடிந்ததால் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து ஆலோசனைகள் சொல்லி வந்திருக்கிறார். இதில் ஏற்பட்ட நம்பிக்கையில் தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்துள்ளார் வெற்றிவேல்.

பல விசயங்களில் வெற்றிவேல் சொன்னது நடக்க அவர் சொன்னது அத்தனையையும் நம்பி அவர் சொன்னபடியே செய்து வந்திருக்கிறார் விஜய். தினந்தோறும் சூரியன் உதயமாகும் நேரத்தில் விஜய் வீட்டு வாசலில் மூன்று வித கோலம் போட வேண்டும் என்று வெற்றிவேல் சொல்ல, மூன்று கோலங்களை போடுவதற்கு மூன்று பெண்கள் நியமித்திருந்தார் விஜய். ஆட்சியில் அமருவீர்கள் என்று சொன்னதும் பலித்ததால் அதற்கு நன்றிக்கடனாக தான் பதவியேற்றதும் வெற்றிவேலுவுக்கு தனது ஆலோசகராக அரசுப்பதவி வழங்கினார் விஜய்.
இது மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தியதால் நியமன உத்தரவை வாபஸ் பெறச் செய்துவிட்டார் விஜய்.



