நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, விஜய்யிடம் செல்போனில் பேசி இருந்தார். இன்று கூட்டணி உறுதியான பின்னர் அது குறித்து காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராகுல் – விஜய் இருவரும் கூட்டாக இணைந்து இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.
’’தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. விஜய், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தனது ஆதரவை வழங்குமாறு முறையாகக் கோரியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான மற்றும் மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலின் அடையாளமாகவும், அதனைத் தோற்றுவித்த அரசியல் கட்சியாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதும், அதனை நிலைநிறுத்துவதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதற்கிணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் , தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளன.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்காமல் தமிழக வெற்றி கழகம் விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு அமையும்.
தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையிலான இந்தக் கூட்டணியானது, வரும் ஆண்டுகளிலும் பத்தாண்டுகளிலும், தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கைகளின் மீது உறுதியான பற்றுறுதியுடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்காலத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணியானது, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்.
ஒரு மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்போம் என்றும்; தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக உறுதியளிக்கின்றனர்.’’



