தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 2015-ல் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றியின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். இதனைத்தொடர்ந்து, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில், முன்னணி நடிகை நயன்தாராவை 2022-ல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு உயிர், உலகம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து தான் இயக்கியுள்ள ‘எல்.ஐ.கே’ (LIK) திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அளித்த பேட்டியில், தனது ஆரம்பகாலத் திரைப்பயணம் மற்றும் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

நேர்காணலில் ‘போடா போடி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், தனது 22 வயதிலேயே ‘போடா போடி’ திரைப்படத்திற்கு ஒப்பந்தமானதாகவும், ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் வெளியாக 5 ஆண்டுகள் ஆனது என்றும் இறுதியில், 2012-ம் ஆண்டு தீபாவளி அன்று ‘போடா போடி’ திரைப்படம் வெளியானபோது, அதே சமயத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் வெளியானது என்றும் “துப்பாக்கி ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படம், அந்தப் படத்தின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் ‘போடா போடி’ திரைப்படத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கி படத்தின் இடைவேளைக் காட்சியில் நடிகர் விஜய் சரியாக 12 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்வார், ஆனால் உண்மையில் அன்று அவர் சுட்டது 13 பேரை, அந்த 13-வது நபர் நான்தான் என்றும் துப்பாக்கி படத்தின் வெற்றியால் அன்று வீழ்ந்தவர்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிட்டார்.(Online Tamil News)


