உலகில் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) அமைப்பின் தலைவனுமான ‘எல் மென்சோ‘ (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேர மெக்சிகோ ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டபால்பா பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மெக்சிகோ சிறப்புப் படையினர் மற்றும் ராணுவம் இணைந்து அதிரடித் தாக்குதலை நடத்தின. அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளின் துல்லியமான வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சண்டையில் எல் மென்சோ பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனது தலைவன் கொல்லப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாலிஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகள், லாரிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குவாடலஜாரா போன்ற முக்கிய நகரங்களில் பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் போலீஸ் அதிகாரியான எல் மென்சோ, பிற்காலத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் கொடூரமான போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அமெரிக்காவிற்கு கடத்தப்படும் ஆபத்தான போதைப்பொருட்களின் பின்னணியில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு சுமார் 125 கோடி ரூபாய் (15 மில்லியன் டாலர்) பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தால் மெக்சிகோவில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.(Online Tamil News)



