பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவாகி வரும் ‘எல்-நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, உலகளவில் வானிலை தலைகீழாக மாறக்கூடும் என்று ஐநா சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எல்-நினோ தாக்கத்தால் இந்தியப் பருவமழை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் எல்-நினோ உருவாவதற்கான வாய்ப்பு 80% ஆக உள்ளது. மேலும், இது வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்பு 90%-க்கும் அதிகமாக உள்ளது என்று WMO தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் அடிமட்ட நீர் வெப்பநிலை வழக்கமான அளவை விட அதிகமாகக் காணப்படுகிறது. இது கடற்பரப்பில் பெரும் வெப்பக் குவியலை உருவாக்கி எல்-நினோவை தீவிரமாக்குகிறது.இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்கு பருவமழைதான் நாட்டின் 70% நீர் தேவையை நிறைவு செய்கிறது. ஆனால், இந்த எல்-நினோ பருவமழையைத் தலைகீழாக மாற்றப் போகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாட்டின் இந்த ஆண்டு பருவமழை பொழிவை அதன் நீண்டகால சராசரியில் இருந்து 90% ஆகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது வழக்கமான அளவை விட மிகக் குறைவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான மழைப்பொழிவை இந்தியா இந்த ஆண்டு சந்திக்கலாம்.
ஜூன் மாதத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்கத்தை விடக் கூடுதல் வெப்பமும், வறட்சியும் நிலவக்கூடும். குறிப்பாக இந்தியாவின் மத்திய மற்றும் வட மாநிலங்களில் பருவமழை பலவீனமடைந்து நீண்ட வறண்ட காலநிலையை உருவாக்கலாம். இதனால் நெல், பருப்பு மற்றும் பருத்தி விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள இந்திய வேளாண் அமைச்சகம் மற்றும் நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவை, அதிக தண்ணீர் தேவைப்படும் நெல் போன்ற பயிர்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் (Millets) மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிட விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இந்திய நீர்நிலைகளில் ஓரளவுக்குத் திருப்திகரமான அளவு (வழக்கத்தை விட 127%) தண்ணீர் இருப்பு இருப்பது மட்டுமே இப்போதைய ஒரே சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாநில அரசுகள் வறட்சியைச் சமாளிக்க தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.(Online Tamil News)


