எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான பிரபல சமூக ஊடக தளமான ‘X‘, பணம் செலுத்தாத சாதாரண இலவச பயனர்களுக்கு ஒரு புதிய கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. தளத்தின் உதவி மையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ப்ளூ டிக் இல்லாத சாதாரண பயனர்கள் இனி ஒரு நாளைக்கு 50 அசல் பதிவுகளை (Original Posts) மட்டுமே செய்ய முடியும்.
மேலும், மற்றவர்களின் பதிவுகளுக்குப் பதில் அளிக்கும் ‘Replies’ எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இலவச பயனர்கள் ஒரு நாளைக்கு 2,400 பதிவுகள் வரை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வரம்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 50 பதிவுகள் மற்றும் 200 பதில்கள் என்ற வரம்பானது நாள் முழுவதும் அரை மணி நேர இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய நேரத்தில் வேகமாகப் பதிவு செய்யும் பயனர்களின் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 நேரடி செய்திகளை மட்டுமே அனுப்ப முடியும் என்றும், ஒரு நாளைக்கு 400 புதிய கணக்குகளை மட்டுமே பின்தொடர (Follow) முடியும் என்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தளத்தில் உள்ள போலி கணக்குகள் மற்றும் தேவையற்ற விளம்பரப் பதிவுகளைத் தடுத்து, சர்வர் சுமையைக் குறைப்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த திடீர் மாற்றத்தால் அப்ளிகேஷனைத் தீவிரமாகப் பயன்படுத்தும் சாதாரண பயனர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புதிய கட்டுப்பாடு தங்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறி, பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி எக்ஸ் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள், மாதம் 3 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹170) முதல் தொடங்கும் ‘X Premium’ சந்தாவை (Subscription) கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.(Online Tamil News)


